Sunday, March 22, 2015

  • March 22, 2015
  • askshrinivas

கடினமாகவும், கவனமாகவும் உருவாக்கப்பட்டதைப் போன்று தான் ஆரஞ்சுப் பழத்தின் தோல் இருக்கும். பல்வேறு மருத்துவ பலன்களைத் தன்னகத்தே கொண்டிருப்பதால், பழங்காலத்திலிருந்தே மிகுந்த மதிப்பைப் பெற்று வந்துள்ளது ஆரஞ்சுப் பழம்.
சாதாரணமாகவே ஆரஞ்சுப் பழத்தை ஜுஸ் போட்டுக் குடிக்கவோ அல்லது சுவையாக அதன் சுளையைச் சாப்பிடவோ தான் பயன்படுத்துவோம். ஆனால் அதன் தோலைக் கண்டு கொள்ள மாட்டோம். இந்த தோலிலுள்ள மருத்துவ மற்றும் ஊட்டச்சத்துக்களைப் பற்றித் தெரிந்து கொண்டால், நாம் எவ்வளவு பெரிய தவறைச் செய்து வருகிறோம் என்று உணர்ந்து கொள்வோம்.
இந்த கட்டுரையின் வழியாக ஆரஞ்சுப் பழத்தோலின் பலவிதமான பயன்பாடுகளைப் பற்றித் தெரிந்து கொள்ளப் போகிறோம். தயாராகிக் கொள்ளுங்கள்.
ஆரஞ்சுப் பழத்தின் தோலில் கொழுப்புகளைக் குறைக்கும் அத்தனை குணங்களைக் கொண்டுள்ள சத்துக்கள் நிரம்பியுள்ளன. இந்த சத்துக்களைக் கொண்டு நமது உடலிலுள்ள LDL அல்லது 'மோசமான' கொழுப்புகளை எதிர்த்துப் போராடி, இதயத்திற்கும் செல்லும் குழாய்களில் அடைப்புகள் ஏற்படாமல் தவிர்த்திட முடியும். எனவே, உங்களுடைய உணவில் ஆரஞ்சுப் பழத்தின் தோலை தொடர்ந்து சேர்த்துக் கொண்டால் கொழுப்புகளை ஓட ஓட விரட்ட முடியும்.

ஆக்ஸிஜன் இல்லாத கிருமிகளை விரட்டுவது மட்டுமல்லாமல், ஆரோக்கியமான செல்களிலிருந்து ஆக்ஸிஜனை எடுத்துக் கொள்ளும் குணத்தையும் ஆரஞ்சுப் பழத்தோல் கொண்டுள்ளது. இதன் மூலம் புற்றுநோயை வளர்க்கும் செல்களின் வளர்ச்சி முழுமையாகத் தவிர்க்கப்படுகிறது.

நெடுங்காலமாக இதயப் பகுதியில் எரிச்சலை அனுபவித்துக் கொண்டிருக்கிறீர்களா? இதோ உங்களுக்கான இயற்கைத் தீர்வு - ஆரஞ்சுத் தோல்கள்! ஆரஞ்சுப் பழத்திலுள்ள சுறுசுறுப்பான வேதிப்பொருட்கள் நெஞ்செரிச்சலில் இருந்து விடுபட உதவுதை ஆய்வு முடிவுகள் உறுதி செய்துள்ளன. சுமார் 20 நாட்களுக்கு ஆரஞ்சுப் பழத்தோலை பயன்படுத்தி வந்தால், நெஞ்செரிச்சலுக்கு குட் பை!

உணவுக்குத் தேவையான நார்ச்சத்துக்களில் பலவற்றை ஆரஞ்சு பழத்தோல்கள் கொண்டுள்ளன. 100 கிராம் ஆரஞ்சுப் பழத் தோலில் 10.6 கிராம் அளவிற்கு உணவுக்கான நார்ச்சத்துக்கள் உள்ளன. எரிச்சலூட்டும் வயிற்று நோயை (Irritable Bowel Syndrome) குணப்படுத்தவும், மலச்சிக்கல் மற்றும் வயிறு உப்புசமடைதல் போன்றவற்றிலிருந்து நிவாரணம் பெறவும் ஆரஞ்சுப் பழத்தோல் பெரிதும் உதவுகிறது. ஆரஞ்சுப் பழத்தோலைக் கொண்டு தயார் செய்யும் தேநீருக்கு, நமது செரிமான உறுப்புகளை உறுதிப்படுத்தும் குணமும் உண்டு

ஆரஞ்சுப் பழத்தோலில் அபரிமிதமாகக் குவிந்து கிடக்கும் வைட்டமின் சி ஒரு மிகச் சிறந்த நோய் எதிர்ப்புச் சத்தாகும். ஆரஞ்சு பழத்தின் வைட்டமின் சி-யில் உள்ள ஆக்சிஜன் எதிர்ப்பு பொருட்கள் மூச்சுக்குழாய் அழற்சி (Bronchitis), சளி, ப்ளூ, ஆஸ்துமா மற்றும் நுரையீரல் புற்றுநோய் போன்றவற்றிலிருந்து விடுபட பெரிதும் உதவுகின்றன

பழங்காலத்தில் ஆரஞ்சுப் பழத்தின் தோலை மருத்துவ குணத்திற்காக, அதை பொக்கிஷம் போல மக்கள் பாதுகாத்து வந்திருந்தார்கள். ஆரஞ்சுப் பழத்தோலிலிருந்து எடுக்கப்பட்ட சத்துக்கள் அஜீரணம் உட்பட பல்வேறு வகையான ஜீரணக் கோளாறுகளை குணப்படுத்த உதவி செய்துள்ளன. இந்த தோலிலுள்ள உணவுக்கான நார்ச்சத்துக்கள் குடலின் இயக்கத்தை கட்டுப்படுத்துவதால், ஜீரண அமைப்பு நன்றாக இயங்கும்

மேற்கண்ட ஆரோக்கிய பலன்கள் மட்டுமல்லாமல், வேறு சில பயன்பாடுகளையும் ஆரஞ்சுப் பழத்தோல் பெற்றுள்ளது. இந்த தோல்களைக் கொண்டு ஆரஞ்சு வாசனையைத் தரும் திரவத்தை தயாரிக்க முடியும். ஆரஞ்சுப் பழத்தோலின் சில புதுமையான பயன்பாடுகளைப் பற்றி இப்பொழுது பார்ப்போமா

அறையை துர்நாற்றமில்லாமல் வைத்துக் கொள்ள பயன்படுத்தும் சிட்ரஸ் சென்ட்டாக ஆரஞ்சுப் பழத்தோலை பயன்படுத்தலாம். நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் சந்தனம் அல்லது இலவங்கம் போன்ற சில வாசனைத் தரும் பொருட்களை ஆரஞ்சுப் பழத்தோலுடன் கலவையாக சேர்த்துக் கொள்ள வேண்டியது தான். 100% இயற்கையானதாகவும், மிகவும் விலை குறைவாகவும் இருப்பது தான் இதன் தனிச்சிறப்பு.

மஞ்சள் கறை படிந்துள்ள பற்களை பளிச்சிட உதவும் மிகவும் மலிவான மற்றும் இயற்கையான வழிமுறை ஆரஞ்சுப் பழத்தோல்களைப் பயன்படுத்துவதே. நீங்கள் ஆரஞ்சுப் பழத்தோலை பசையாகவோ அல்லது நேரடியாக தோலை பற்களின் மீதோ தேய்ப்பது தான் நீங்கள் செய்ய வேண்டிய வேலை. மிகவும் சென்சிடிவ்வான பற்களில் இவ்வாறு செய்யலாமா என்று பலரும் யோசித்திருப்பார்கள். ஆனால் உண்மை நேர்மாறானது! பற்களில் ஏற்படும் கூச்சத்தை சரி செய்யும் குணமும் ஆரஞ்சுத் தோல்களுக்கு உள்ளது என்பது மற்றுமொரு சிறப்பம்சமாகும்.

உங்கள் வீட்டிலுள்ள அழுக்கடைந்து போயிருக்கும் சிங்க்கை சுத்தம் செய்ய ஆரஞ்சுத் பழத்தோல் உதவும்! ஆச்சரியம் வேண்டாம். ஆரஞ்சுப் பழத்தோலிலுள்ள எண்ணெய் பசை இயற்கையான சுத்தம் செய்யும் முகவராகச் செயல்பட்டு அழுக்குகளை சுத்தம் செய்யும்.

தாவரங்களின் இலைகள் உருவாக மிகப் பெரிய காரணமாக இருக்கும் நைட்ரஜன் சத்துக்களை நிரம்பவும் பெற்றுள்ள ஆரஞ்சுத் தோல்கள். அது மட்டுமல்லாமல், உங்கள் வீட்டுத் தோட்டத்தில் உள்ள மட்கிய பொருட்களை சத்துள்ள உரமாக மாற்றுவதில் ஆரஞ்சுத் தோல்களுக்கு நிகர் வேறெதுவும் இல்லை. எனினும், அளவுக்கு அதிகமாக பயன்படுத்துவதும் நல்லதல்ல. ஏனெனில், நைட்ரஜன் சத்து அதிகமாக உள்ள மண், இலைகளை சுருங்கச் செய்து விடும்.

இயற்கையாகவே சருமத்தை பளபளப்பாக்கும் குணத்தை ஆரஞ்சுப் பழத்தோல் கொண்டுள்ளது. ஆரஞ்சுப் பழத்தோலின் சாற்றை தோலில் தடவிக் கொள்ளும் போது, தோல் பகுதி மென்மையாக மாறவும் மற்றும் கருப்பான கறைகள் மறையவும் கூடும். ஆரஞ்சுப் பழத்தோல்களை சருமத்தில் பயன்படுத்துவது பாதுகாப்பானதும் கூட. ஆரஞ்சுப் பழத்தோலை அதிக அழுத்தமில்லாமல் சருமத்தில் தடவுவதையும் மற்றும் எரிச்சலைத் தடுக்க ஆரஞ்சு பசையை பயன்படுத்துவதும் நல்லது. சருமத்தை பளபளக்கச் செய்வதோடு மட்டுமல்லாமல், மென்மையாக மாற்றவும், இயற்கையாக அதன் துளைகளை சுத்தம் செய்யவும் மற்றும் தீங்கு விளைவிக்கும் புறஊதாக் கதிர்களிடமிருந்து பாதுகாக்கும் கவசமாக இருக்கவும் ஆரஞ்சுப் பழத்தோல் உதவும்.

ஆரஞ்சுப் பழத்தை முதன்முதலில் விளைவித்து அறுவடை செய்து வந்த காலங்களில், அதன் தோல்கள் மிகவும் கவனமாக பாதுகாக்கப்பட்டு வந்தன. உணவுகளை சமைக்கும் போது, அவற்றை அழகுபடுத்தவும் மற்றும் புளிப்புச் சுவையை உணவில் கொடுக்கவும் அவை பயன்படுத்தப்பட்டன. இன்றும் கூட, ஆரஞ்சுப் பழத்தின் இயற்கையான ஊட்டச்சத்துப் பலன்களை எண்ணற்ற வழிமுறைகளில் உணவுகளில் பயன்படுத்திப் பலன் பெறலாம்

கொசுக்கள், ஈக்கள் மற்றும் பிற பூச்சிகளை விரட்டும் இயற்கையான அமிலங்களை ஆரஞ்சு கொண்டுள்ளது உங்களுக்குத் தெரியுமா? தெரிந்திருக்காது. ஆனால், இப்பொழுது ஆரஞ்சுப் பழத்தோலின் சாற்றை எறும்புகள் வரும் பாதையிலும், பிற பூச்சிகளின் இடங்களிலும் தெளித்து பலன் பெறலாம்

ஆரஞ்சுப் பழத்தோலைப் பயன்படுத்தும் போது, பூச்சிக் கொல்லிகள் பயன்படுத்தாத, உயிரோட்டமுள்ள சூழலில் வளர்க்கப்பட்ட ஆரஞ்சுப் பழங்களை வாங்குவதை உறுதி செய்து கொள்ளுங்கள். ஏனெனில், இன்று சந்தைகளில் விற்கப்படும் ஆரஞ்சுப் பழங்களில் பலவும் செயற்கை உரங்களால் வளர்க்கப்பட்டவைகளாக உள்ளன. இவற்றிலுள்ள வேதிப்பொருட்கள் உங்களுடைய சருமத்திற்குள் செல்வது நல்லதன்று


Popular Posts

Followers